நாட்டின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கா விட்டால் சீனாவை வீட்டுக்கு போ என்ற கோசத்துக்கு தலைமையேற்கப் போவதாக ராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (02) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா உதவவில்லை என்றும் அதற்கு பதிலாக சீனா, தொடர்ந்தும் இலங்கையை கடன் பொறிக்குள் வைத்திருக்கவே முயற்சிப்பதாகவும் சாணக்கியன் இதன்போது குற்றம் சுமத்தினார்.
தாம் அண்மையில் இது தொடர்பாக நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு கொழும்பில் உள்ள சீனத்தூதரக பேச்சாளர் டுவிட்டரில் பதில் வழங்கியுள்ளதாகவும் இது, இலங்கை மக்களின் இறைமைக்கு எதிரான செயலாகும் என்றும் சாணக்கியன் குறிப்பிட்டார்.
எனவே, சீனாவின் இந்த செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்றும் இதனை விடுத்து 22 மில்லியன் இலங்கை மக்களுக்கு நன்மை செய்யவேண்டுமானால், இலங்கைக்கு வழங்கியுள்ள கடனை ரத்துச் செய்யவேண்டும் என்றும் தெரிவித்தார்.
அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்காக கடன் மறுசீரமைப்புக்கு உதவ வேண்டும் என்று சாணக்கியன் கோரிக்கை விடுத்தார்.
மக்கள் “கோட்டா கோ கோம்” பிரசாரத்தை முன்னெடுத்தது போல், “சீனா கோ கோம்” போராட்டமும் தொடங்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
