பெண்கள் அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து அத்தியாவசிய மருந்து வகைகள் மற்றும் மருந்து உபகரணங்கள் உடனடியாக மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று (06) காலை 10.00 மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.
“மருந்துகளை உடனடியாக பெற வழிவகை செய்ய வேண்டும்”, “பெண்களின் சுகாதார உரிமை உறுதிப்படுத்த வேண்டும்”, “சுகாதார உரிமை எமது உரிமை” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகள் காட்சிபடுத்தப்பட்டன.
மேற்படி போராட்டத்தின் இறுதியில், மகஜர் வாசிக்கப்பட்டது.
அவ் மகஜிரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“இலங்கையின் வடக்கு – கிழக்கு பிரதேசங்களிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள், பெண்கள் வலையமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகிய நாம் எமது மேற்படி கோரிக்கையை இத்தாழ் தங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.
இலங்கையின் குறிப்பாக வடக்கு – கிழக்கு பிரதேசங்களிலுள்ள நாங்கள் கடந்த கால யுத்தம், கொவிட் தொற்று மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து வந்தாலும் தற்போது இலங்கை வாழ் அனேகமான மக்களுக்கான தேவையான அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் முழுமையாகக் கிடைக்கப் பெறாத நிலையினையே காணுகின்றோம். இது எங்களது அடிப்படை சுகாதார உரிமையினை அனுபவிக்க முடியாத தன்மையையே காட்டி நிற்கின்றது.
மேற்படி அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் முழுமையாகக் கிடைக்கப் பெறாத பாதிப்பானது அனைத்து மக்களையும் பாதித்திருந்தாலும் குறிப்பாக வடக்கு -கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களையும் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளையும் அதிகமாக பாதிப்பிற் குள்ளாக்கியிருக்கின்றது.
இன்று வடக்கு கிழக்கு பிரதேசங்களிலுள்ள மக்கள் தங்களுக்கு ஏற்படும் சாதாரண நோய் தாக்கம் தொடக்கம் பாரிய சத்திர சிகிச்சை வரையான சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு செல்லுவதே அவர்களது உரிமையாகும். குறிப்பாக மக்கள் வைத்தியசாலைகளுக்குச் செல்லுகின்ற போது குறிப்பிட்டளவு அத்தியாவசிய மருந்துப் பொருட்களே வைத்தியசாலைகளில் வழங்கப்படுகின்றது.
ஏனைய மருந்துப் பொருட்களை தனியார் வைத்தியசாலைகளிலோ அல்லது தனியார் மருந்தகங்களிலோ பணம் செலுத்தி பெற வுேண்டிய சூழ்நிலைகளுக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். அதுமாத்திரமின்றி நாய், பூனை மற்றும் பாம்பு தீண்டல்களுக்கான மருந்துகளும் கிடைக்கப் பெறுவது குறைவாகவே காணப்படுகின்றது.
குறிப்பாக சத்திர சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்படுகின்ற நோயாளிகள் மருத்துவ சாதனங்கள் உரிய வகையில் கிடைக்கப் பெறாத காரணத்தினால் உரிய காலத்தில் மேற்கொள்ள முடியாத சூழ்நிலையும் ஏற்படுகின்றது.
குறிப்பாக இலங்கையில் உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் அதிகமான பிள்ளைகள் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர், இவை கவனிக்கப்படாதவிடத்து எமது பிள்ளைகளின் எதிர்காலம் ஆரோக்கியமற்றதாகவே காணப்படுவதுடன், இது எமது இலங்கை வாழ் மக்களின் நிலையான வாழ்க்கையை கேள்விக் குறியாக்கும் நிலையினையே உணர்த்தி நிற்கின்றது.
இது குறிப்பாக அரச வளங்கள் முழுமையாகக் கிடைக்கப் பெறாத அடிநிலைக் கிராமங்களைச் சேர்ந்த மக்களை அதிகமாக பாதிப்பிற்குள்ளாக்கியிருப்பதுடன் மற்றும் மத்திய வாழ்க்கை நிலையிலுள்ளவர்களையும் பாதித்திருக்கின்றது.
எனவே இலங்கை அரசு என்ற வகையில் மேற்படி அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் முழுமையாகக் கிடைக்கப் பெறாத நிலையினால் பாதிப்பிற்குள்ளாகியிருக்கின்ற இலங்கை வாழ் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்து வகைகளையும் மருத்துவ சாதனங்களையும் உடன் கிடைப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்தித் தருமாறு வேண்டி நிற்கின்றோம். – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


