இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று இடம்பெற்றது.
இந்தியப் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ஸ ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர்களான அமிதஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், பிரகாலத் தோஷி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மம்தா பானர்ஜி, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் நடைபெற உள்ள ஜி-20 துணை மாநாட்டின் சாராம்சங்கள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஜி 20 ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது:-
“காலநிலை மாற்றத்தை தடுக்க இந்திய அரசின் இலக்குகளை எட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இயற்கை பாதுகாப்பு காலநிலை மாற்றத்தை கையாள தமிழ்நாடு “பசுமை காலநிலை நிறுவனத்தை” உருவாக்கி உள்ளோம். உலகளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்றத் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்.
இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம். இந்தியா ஜி 20-க்கு தலைமை ஏற்றுள்ள நிலையில், தமிழ்நாடு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும்” என்றார்.
