இலங்கை தமிழரசு கட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும், ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே செயல்படும் என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூட்டாகத் தெரிவித்துள்ளன.
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நேற்று முன்தினம் வவுனியாவில் நடைபெற்றது. இதில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதிக ஆசனங்களை பெறும் நோக்கில் தனித்துப் போட்டியிடுவது குறித்து தொழில்நுட்ப ரீதியாக ஆராயப்பட்டதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
முன்னதாக, உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் உத்தியோகப்பற்றற்ற முறையில் பேசினார் என்றும், அவர்கள் அதற்கு சாதகமான நிலைப்பாட்டை தெரிவித்தனர் என்றும் கூறியிருக்கிறார் என்று அறிய வருகிறது. இந்த விடயம் தொடர்பில் பங்காளிக் கட்சிகளை தொடர்பு கொண்டபோது அவர்கள் தெரிவித்தவை வருமாறு,
ரெலோ கட்சியின் பேச்சாளர் சுரேன் குருசுவாமி:
தேர்தலில் எப்படி போட்டியிடுவது என்பது ஒவ்வொரு கட்சியின் சுதந்திரம். தாம் எப்படி போட்டியிடுவது என்பதை தமிழரசு கட்சிதான் தீர்மானிக்க முடியும். அவர்கள் எப்படி போட்டியிட்டாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து செயல்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடும் – என்றார்.
புளொட் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன்:
இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியகுழுவில் பேசப்பட்ட விடயம் பற்றி செய்திகளை பார்த்து அறிந்தேன். ஒவ்வொரு கட்சியும் எப்படி தேர்தலை எதிர்கொள்வது என்பது பற்றி முடிவெடுக்கும் சுதந்திரம் உள்ளது. அது தமிழரசு கட்சிக்கும் உள்ளது. என்றாலும், இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் அந்த யோசனையை இதுவரை எம்மிடம் தெரிவிக்கவில்லை – கலந்துரையாடவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பை மேலும் பலப்படுத்தி, தமிழ் மக்களை ஓரணிப்படுத்தவே நாம் தொடர்ந்து முயன்று வருகிறோம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையையே மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். என்றாலும், தமிழரசு கட்சி தனித்து போட்டியிடுவது என்பது விரும்பத்தகாத – துரதிர்ஷ்டவசமான முடிவை எடுத்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயலிழந்து விடுமென மக்கள் அச்சமடைய தேவையில்லை. நாம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக தொடர்ந்து செயல்படுவோம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகவே தேர்தல்களில் போட்டியிடுவோம் – என்றார்.
