கட்டாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து தொடரில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வெற்றிகொண்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
பிரான்ஸ் அணி, மொராக்கோவை எதிர்கொண்டது. அல்பேத் ஸ்டேடியத்தில் ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் தியோ ஹெர்னாண்டஸ் தமது அணிக்கான முதல் கோலை அடித்த்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
பதில் கோல் அடிக்க மொராக்கோ வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் அவர்களது முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
முதல் பாதி ஆட்ட நிறைவில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தின் 79 வது நிமிடத்தில் மற்றொரு பிரான்ஸ் வீரர் கோலோ முவானி தனது அணிக்கான 2வது கோலை அடித்தார்.
இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் உலக கிண்ண தொடரில் 4வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இந்த உலகக் கிண்ணத்தில் கணிக்க முடியாத ஒரு அணியாக கருதப்பட்ட மொராக்கோ, அரை இறுதியை எட்டிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற சாதனையை படைத்தது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.
