சர்வதேச நாணய நிதியத்துக்கும் (ஐ. எம். எவ்.) – எமது சர்வதேச சகாக்கள் – எங்கள் இரு தரப்பு நண்பர்களுக்கும் நாங்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை தெரிவித்துள்ளோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.
இலங்கையர்களின் நன்மைக்கும் உலகப் பொருளாதாரத்தின் நன்மைக்கும் இது அவசரமான விடயம். இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவிக்கு அப்பால் அடுத்த வருடம் சர்வதேச அமைப்புகளிடம் இருந்து 5 பில்லியன் டொலர் கடன்களை எதிபார்க்கின்றது என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்ட்டருக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், அரச சொத்துக்களை மறுசீரமைப்பிற்கு உட்படுத்துவதன் மூலம் 300 கோடி டொலர் வரை திரட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஏழு தசாப்தங்களில் இலங்கை சந்தித்துள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி எரிபொருள் உணவு தட்டுப்பாடுகளுக்கு வழிவகுத்தது. இதன், காரணமாக பரந்துபட்ட அமைதியின்மை ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த ஜூலையில் கோட்டாபய ராஜபக்ஷ பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
40.6 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனில் சிக்குண்டுள்ள இலங்கைக்கு மேலதிக நிதி உதவி அவசரமாக தேவைப்படுகின்றது. இலங்கை தனது கடனில் 22 வீதத்தை சீனாவுக்கு செலுத்த வேண்டியுள்ளது. செப்ரெம்பரில் இலங்கை 2.9 மில்லியன் டொலர் நிதியுதவி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டியது. அடுத்த வருடம் இந்த நிதிஉதவி கிடைக்கலாம்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கிடைக்கும் நிதி உதவிக்கு அப்பால், நாங்கள் ஏனையவர்களிடமிருந்து நிதி உதவியை எதிர்பார்க்கின்றோம். சர்வதேச தரப்புகளிடமிருந்து நான்கு – ஐந்து பில்லியன் டொலர்களை எதிர்பார்க்கின்றோம். ஜனாதிபதி நாட்டின் சில அரசநிறுவனங்களை மறுசீரமைப்பது குறித்து ஆர்வமாக உள்ளார். இதன் மூலம் இரண்டு அல்லது மூன்று பில்லியன் டொலரை திரட்டமுடியும். அத்துடன், திறைசேரியையும் அந்நிய செலாவணி கையிருப்பையும் வலுப்படுத்த முடியும்.
சர்வதேச நாணய நிதியத்துக்கான கடனுக்கு அதன் நிறைவேற்று சபை டிசெம்பர் மாதத்துக்குள் அங்கீகாரமளிக்கும் என இலங்கை எதிர்பார்த்தது. எனினும், இது ஜனவரியிலேயே சாத்தியமாகும்.
இலங்கை தனக்கு அதிகளவு கடன்களை வழங்கிய சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளிடமிருந்தும் தனியார் கடன் வழங்குநர்களிடமிருந்தும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உத்தரவாதங்களை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதிகளவு கடனை வழங்கிய சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து உத்தரவாத கடிதங்களுக்காக இலங்கை காத்திருக்கின்றது.
இந்த இரு நாடுகளும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு ஆதரவளித்துள்ளன. இலங்கை அவைகளுடன் தரவுகள் மற்றும் ஆவணங்களை பகிர்ந்துகொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துக்கும் – எமது சர்வதேச சகாக்களுக்கும் – எங்கள் இரு தரப்பு நண்பர்களுக்கும் நாங்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை தெரிவித்துள்ளோம். இலங்கையர்களின் நன்மைக்கும் உலக பொருளாதாரத்தின் நன்மைக்கும் இது அவசரமான விடயம்.
முன்னர் 70வீதமாக காணப்பட்ட பணவீக்கம் நவம்பரில் 61 வீதமாகக் காணப்பட்டது. ஆனால், பொருளாதாரம் இந்த வருடம் 8.7 வீதத்தால் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் பின்னர் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அடுத்த வருடத்தின் முதல் காலாண்டை சர்வதேச நாணய நிதியத்தினதும் சர்வதேச அமைப்புகளினதும் கடன் உதவிகளுடனும் ஆரம்பிக்க வேண்டும். ஆனால், 2024லேயே பொருளாதார வளர்ச்சி ஏற்படும் – என்றும் கூறினார்.
