வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைத்து 13ஐ அமுல்படுத்தக் கோரும் தமிழ் தலைமைகளும், அதே நிலைப்பாட்டிலுள்ள முஸ்லிம் தலைமையும் இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகாரப் பகிர்வு என்ன என்பதை தௌிவுபடுத்த வேண்டும் என்று அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது,
“இனப்பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் தாம் கரிசனை கொண்டுள்ள போதிலும், அதுவே முஸ்லிம் சமூகத்துக்கு பிரச்னையாகிவிடக்கூடாது. வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைத்து சமஷ்டி கோரும் தரப்புக்கள் இணைந்த வடக்கு -கிழக்கில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் அதிகாரம் என்னவென்பது பற்றி மனம் திறப்பது அவசியம்.
வடக்கும் – கிழக்கும் இணைய வேண்டுமென்ற நிலைப்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் இருப்பாரேயானால், வடக்கு – கிழக்கு முஸ்லிம்களுக்கு வழங்கப்போகும் அரசியல் தீர்வை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஹக்கீமுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் இதுவரை காலமும் இரகசியமாக நடத்தப்பட்ட பேச்சுகள் வௌிக்கொணரப்படுவது அவசியம்.
அத்துடன், வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பிரிந்திருக்க வேண்டுமென ஹக்கீம் கூறுவாரேயானால், அந்தந்த மாகாணங்களில் கையகப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்பதுடன், காணிகளின் எல்லை பிரச்னைகளும் நிவர்த்திக்கப்பட வேண்டும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இந்த விடயத்தில் கடைப்பிடிக்கும் மௌனமும் கலைக்கப்பட வேண்டும்” என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
