கட்டாரில் கடந்த மாதம் 20 ஆம் திகதி கோலாகலமாக தொடங்கிய 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நேற்றுடன் நிறைவுக்கு வந்தது.
32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவின் இறுதி ஆட்டம் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8.30 மணிக்கு ஆரம்பமானது.
இறுதிப்போட்டியில் போட்டியில் பிரான்சும், ஆர்ஜென்டினாவும் மோதின. ஆட்டம் தொடங்கிய 23-வது நிமிடத்தில் ஆர்ஜென்டினா அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அணித் தலைவரும், நட்சத்திர வீரருமான மெஸ்சி தனது அணிக்கான முதல் கோலை அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
தொடர்ந்து 36-வது நிமிடத்தில் ஏஞ்சல் டிமெரியா ஆர்ஜென்டினாவிற்கான 2-வது கோலை அடித்தார். இதன்மூலம் முதல் பாதி ஆட்ட முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜெடினா முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் கோல் அடிக்கும் முயற்சியை பிரான்ஸ் வீரர்கள் தீவிரப்படுத்தினர். அதன்படி 80 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். அடுத்த ஒரு நிமிடத்தில் மீண்டும் அவர் தமது அணிக்கு மேலும் ஒரு கோல் அடித்து ஆர்ஜென்டினாவை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சம நிலையை எட்டியது.
இதையடுத்து முதல் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் இரண்டாவதாக கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. 108வது நிமிடத்தில் மெஸ்சி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் 3-2 என்ற கணக்கில் ஆர்ஜென்டினா முன்னிலை பெற்றது.
118 வது நிமிடத்தில் எம்பாப்பே தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார். இதையடுத்து இரு அணிகளும் 3-3 சமனிலை பெற்றன. எம்பாப்பே ஹாட்ரிக் கோலடித்து அசத்தினார். மூன்றாவது கூடுதல் நேரத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இதனால், வெற்றியை தீர்மானிக்க பெனால்டிசூட் முறை வழங்கப்பட்டது. இதில் 4-2 என்ற கணக்கில் ஆர்ஜென்டினா வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்றாவது முறையாக ஆர்ஜென்டினா உலக கிண்ணத்தை கைப்பற்றி அசத்தியது.
கிண்ணத்தை கைப்பற்றிய ஆர்ஜென்டினா அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்படுகிறது.
