பிபில – மெதகம பகுதியில் வெள்ளம் காரணமாக நீரில் அடித்துச்செல்லப்பட்ட சிறுமியை 17 வயது பாடசாலை மாணவரொருவர் தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கடந்த 20 ஆம் திகதி பிபில – மெதகம பகுதியில் தாயுடன் சென்ற சிறுமியொருவர் பெல்லன் ஓயாவின் பாலத்தை கடக்க முயன்ற வேளை திடீரென ஓடையில் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது மகளை காப்பாற்றுமாறு அருகிலிருந்தவர்களிடம் தாயார் கதறி அழுது உதவிகோரியுள்ளார். இருப்பினும், நீரோட்டம் அதிகளவு காணப்பட்டமையினால் பலர் நீரில் இறங்கி சிறுமியை காப்பாற்ற தயக்கம் காட்டியுள்ளனர்.
இந்நிலையில், பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 17 வயதுடைய உயர்தர மாணவரொருவர் தனது உயிரை பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்து 50 மீற்றருக்கு மேல் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியை பலத்த முயற்சியினால் காப்பாற்றியுள்ளார்.
சிறுமியை காப்பாற்றிய மாணவனை பலர் பாராட்டி வருவதுடன், பாடசாலை சமூகத்தால் பாராட்டு விழா நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
