தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசு கட்சி தனது பாரம்பரிய கூட்டாளிகளுக்கு மேலதிகமாக மற்ற தமிழ் கட்சிகளை சேர்த்து பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்கும் கோரிக்கையை தமிழரசு கட்சியின் அரசியல் குழு நிராகரித்து என்று சுமந்திரன் எம். பி. கூறியது தவறானது என்று தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் அரசியல் குழு உறுப்பினருமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“அவ்வாறான ஒரு தீர்மானம் தமிழரசு கட்சியின் அரசியல் குழுவில் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. அரசியல் குழு கூட்டத்தில் கலந்து கொண்டஅரசியல் குழு உறுப்பினர்கள் சகலரும் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தார்கள்.
இறுதி தீர்மானத்தை ஜனவரி 7 ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவுள்ள மத்திய குழு கூட்டத்தில் கலந்துரையாடி எடுப்பதுடன், இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்போடு கலந்துரையாடி இறுதி முடிவு எடுப்பதாகவுமே முடிவு செய்யப்பட்டது.
எந்த சூழ்நிலையிலும் மற்றைய தமிழ் தேசிய கட்சிகளை தேர்தலில் கூட்டணியாக உள்வாங்குவதில்லை என்ற முடிவு மெய்நிகர் வழியில் நடத்தப்பட்ட அரசியல் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பத்து – பதினைந்து நிமிடங்களில் தனக்கு வேறு ஒரு கூட்டம் உள்ளதாகக் கூறி வேறு ஒரு கூட்டத்துக்கு சென்று விட்டார்.
இறுதிவரை அவர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவில்லை. உண்மைக்கு புறம்பான ஓர் அறிக்கையை பொறுப்புள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களுக்கு வேண்டுமென்றே தெரிவித்திருப்பது கவனயீனமும் கவலைக்குரியதும் ஆகும் என்பதை பொறுப்போடு கூறிக்கொள்கின்றேன்” – என்றார்.
