இளைஞர் ஒருவரை 7 வருடங்களாக காதலித்து பல இலட்சம் ரூபாய்களை சுருட்டிக் கொண்டு வேறு திருமணத்திற்கு இளம் பெண் ஒருவர் தயாராவதாக குறிப்பிட்டு சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே ஒட்டப்பட்ட விசித்திர சம்பவம் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள குறித்த பெண்ணின் வீட்டை அண்மித்த பகுதிகளிலேயே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அரச உத்தியோகத்தர் ஒருவருடைய மகளான குறித்த பெண், கடந்த 7 வருடங்களுக்கு மேல் அப்பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
பல வருடங்கள் நீடித்த இவர்களின் காதலுக்கு ஒரு கட்டத்தில் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் குறித்த பெண் காதலனை பிரிய மறுத்து தொடர்ந்தும் காதலித்து வந்துள்ளார்.
அப் பெண்ணை நம்பிய அந்த இளைஞர் காதலிக்காக பல இலட்சங்களை செலவும் செய்துள்ளார். இதன் பின் காதலனை விட அதிக வசதி படைத்த ஒருவரை அப் பெண்ணுக்கு திருமணம் செய்துவைக்க வீட்டார் முடிவு செய்தனர்.
இந்நிலையில், பணத்தின் மீது மோகம் கொண்டதாலும், இந்த திருமணம் நடக்காவிட்டால் தான் இறந்து விடப்போவதாக அப்பெண்ணின் தாய் மிரட்டியதாலும், அப் பெண்ணும் திருமணத்திற்கு ஒப்புதல் தெரிவித்ததுடன் காதலை மறந்து விடுமாறும் காதலனை வற்புறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், இது சம்பந்தமான சுவரொட்டிகள் யுவதியின் வீட்டைச் சுற்றி ஒட்டப்பட்டுள்ளன.