உலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப்பாண்டவர் 16 ஆம் பெனடிக்ட் உடல்நலக் குறைவால் கடந்த 31 ஆம் தேதி மரணம் அடைந்தார்.
போப்பாண்டவர் 16 ஆம் பெனடிக்ட் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து பதவி விலகிய அவர் வாடிகனில் ஓய்வில் இருந்துவந்தார்.
கடந்த மாதம் 28 ஆம் திகதி போப்பாண்டவர் 16 ஆம் பெனடிக்டின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தற்போதைய போப்பாண்டவர் பிரான்சிஸ் தெரிவித்தார். சிகிச்சை பலன் இன்றி கடந்த 31 ஆம் திகதி போப்பாண்டவர் 16 ஆம் பெனடிக்ட் மரணம் அடைந்தார்.
முன்னாள் போப்பாண்டவர் 16ஆம் பெனடிக்ட் உடல் அடங்கிய பேழையை புனித பீட்டர் சதுக்கத்தில் வைத்து இறுதி பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. பதவியில் உள்ள போப் ஆண்டவர் ஒருவர், தனக்கு முந்தைய போப் ஆண்டவரின் இறுதிச் சடங்கை நடத்தியது வரலாற்றில் இதுவே முதல் முறை.
பிரார்த்தனைக் கூட்டத்தின் முடிவில் முன்னாள் போப் ஆண்டவர் 16 ஆம் பெனடிக்ட் உடல் வைக்கப்பட்டிருந்த பேழை மீது போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனித நீர் தெளித்தார். இறுதியாக போப் ஆண்டவர் 16 ஆம் பெனடிக்டின் உடல், அவருக்கு முந்தைய போப் ஆண்டவர் இரண்டாம் ஜான்பால் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்த புனித பீட்டர் தேவாலயத்தின் அடியில் அமைந்துள்ள ‘வாடிகன் கிரோட்டஸ்’ என்று அழைக்கப்படுகிற இடத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு மூன்றடுக்கு பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.
