அரசாங்கம் நினைத்த மாதிரி உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
பல காரணங்களை முன்வைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை நான்கு மாதங்களுக்கு அதாவது, ஜீலை மாதம் வரை ஒத்திவைப்பதற்கு அரசு ஆலோசித்து வருகின்றது என வெளியாகிய செய்தி தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான திட்டங்கள் எதுவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இல்லை. அரசும் நினைத்த மாதிரி உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க முடியாது.
தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு ஏற்கப்படுவதற்கு முன்னதாக தேர்தலை ஒத்திவைக்க இடமில்லை.
நீதிமன்றம் ஊடாக அல்லது நாடாளுமன்றம் மூலமே தேர்தலை ஒத்திவைப்பதற்கான நகர்வுகளை மேற்கொள்ள முடியும். அதற்கும் தகுந்த காரணங்களை முன்வைக்க வேண்டும்” என்றார்.
