கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மூன்றாம் வருட மாணவி, நேற்று நண்பகல் கொழும்பு – 7, குதிரைப் பந்தயத் திடலுக்கு அண்மித்த பகுதியில் கழத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஹோமாகம – கிரிவந்துடுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதான சத்துரி ஹன்சிகா மல்லிகாரச்சி எனும் யுவதியே காதலனால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிய வருகிறது.
குதிரைப் பந்தயத்திடலின் பின் பக்கமாக, கால்பந்தாட்ட சம்மேள கட்டடத்தை நோக்கியதாக உள்ள பகுதியில் வைத்து யுவதியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சடலத்தின் அருகே கையடக்கத் தொலைபேசி ஒன்றும், பை ஒன்றும் காணப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து கறுவாத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இந்நிலையில் நேற்று மாலையாகும் போது, குறித்த யுவதியைக் கொலை செய்தார் எனச் சந்தேகத்தில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வெல்லம்பிட்டி – கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மாணவனையே கறுவாத்தோட்டம் பொலிஸார் கைது செய்தனர்.
கொலையை அடுத்து, அப்பகுதியில் உள்ள சி.சி.ரி.வி. உள்ளிட்ட அறிவியல் தடயங்களை வைத்து முன்னெடுத்த விசாரணைகளில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சி.சி.ரி.வி. காணொளி பரிசோதனையின் போது சந்தேகநபர் கொழும்பு பல்கலைக்கழக மாணவன் என்பதை பல்கலைக்கழககத்தின் மற்றொரு மாணவன் அடையாளம் காட்டினார்.
இதையடுத்து உடனடியாகச் செயற்பட்ட இரு பொலிஸ் குழுக்கள் குறித்த மாணவனை கைது செய்தனர்.
பல்கலைக்கழகத்திலிருந்து, குறித்த சந்தேகநபரான மாணவன் எழுதியதாக நம்பப்படும் சில கடிதங்களும், மானசீக நோய்களுக்கு வழங்கப்படும் சில மருந்துகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
மாணவனின் வீட்டில் சோதனை மேற்க்கொண்ட பொலிஸார் , கொலை செய்யும் போது அவர் அணிந்திருந்தார் எனக் கூறப்படும் ஆடைகள், கொலைக்குப் பயன்படுத்தியதாக நம்பப்படும் இரத்தம் தோய்ந்த கத்தி, அவரது கையடக்கத் தொலைபேசி, பணப் பை என்பவற்றை மீட்டனர்.
இந்நிலையில் அப்பொருட்களை வீட்டில் வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்ளும் நோக்கோடு வீட்டை விட்டு வெளியேறியிருந்ததாக கூறப்படும் சந்தேகநபரை பொலிஸார் இடைநடுவே கைது செய்தனர்.
சந்தேகநபரும், கொலையுண்ட யுவதியும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் காதல் தகராறு கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எனினும், கொலைக்கான பிரதான காரணம் குறித்து இதுவரை தெரியவரவில்லை. கொலையுண்ட யுவதி குதிரைப் பந்தயத்திடல் அருகே, காதலனுடன் பேசுவதற்காக வந்துள்ள போது இந்த விபரீத சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்டம் பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.
