கடந்த மாதம் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது.
இதை குறிக்கும்வகையில், குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஒரு நகை தயாரிப்பு நிறுவனம், 18 கரட் தங்கத்தில் 156 கிராம் எடையுள்ள பிரதமர் மோடியின் மார்பளவு சிலையை உருவாக்கி உள்ளது.
கடந்த மாதமே சிலை தயாராகி விட்டது. ஆனால், எடை 156 கிராமுக்கு மேல் இருந்தது. பா.ஜனதா 156 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், அதற்காக சில மாறுதல்கள் செய்து எடையை 156 கிராமாக குறைத்துள்ளனர்.
20 பொற்கொல்லர்கள் சேர்ந்து 3 மாதங்களாக பாடுபட்டு இந்த சிலையை உருவாக்கி உள்ளனர்.
இந்திய மதிப்பில் ரூபா 11 லட்சம் மதிப்புள்ள தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இச்சிலை மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. விலைக்கு வாங்க பலர் ஆர்வமாக உள்ளனர். இருப்பினும், விற்பது குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் வசந்த் போரா இன்னும் முடிவு செய்யவில்லை.