நுவரெலியா – நானுஓயா – ரதெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூன்று சிறார்கள் உட்பட ஏழு பேர் பலியாகியுள்ளனர். 50 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்று, வேன் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் வேனில் பயணித்த ஆறுபேரும், ஆட்டோ சாரதியும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, இரு பிள்ளைகள் மற்றும் உறவினர் ஒருவர் மற்றும் சாரதி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றைய கோரவிபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம்,
அப்துல் ரஹீம் (வயது -55), ஆயிஷா பாத்திமா (வயது -45), மரியம்
(வயது – 13), நபீஹா (வயது -08), ரஹீம் (வயது -14), நேசராஜ் பிள்ளை
(வயது -25), சன்முகராஜ் (வயது -25) ஆகியோரே உயிரிழந்தனர்.
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து நுவரெலியாவுக்கு கல்விச் சுற்றுலாவந்த மாணவர்களை ஏற்றிவந்த பஸ், மீண்டும் கொழும்பு நோக்கி நேற்றிரவு பயணித்துக்கொண்டிருந்தது.
இந்நிலையில் அதிக வேகம் காரணமாகவும், ‘பிரேக்’ செயற்படாததாலும் நானுஓயா – ரதெல்ல பகுதியில் வைத்து வேன் மற்றும் ஆட்டோவொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. அத்துடன் பஸ் சுமார் 200 அடிவரை பள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளது.
இவ்விபத்தையடுத்து பிரதேச மக்களும், பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் நுவரெலியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளன.
காயமடைந்த மாணவர்களில் மேலதிக சிகிச்சை தேவைப்படுவோரை ஹொலிகொப்டர்மூலம் கொழும்புக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
விபத்தையடுத்து நேற்றிரவே வைத்தியசாலைக்கு சென்ற இதொகவின் பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். அத்துடன், குறுக்கு வீதியை மூடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.
