கூட்டமைப்பின் தலைவராக தற்போதும் இரா.சம்பந்தன் தான் தொடர்கிறார் என சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இன்று (23) அவருடைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“கடந்த சில நாட்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழரசு கட்சி அதனுடைய செயற்பாடுகள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் சம்பந்தமாக பல செய்திகள் வெளிவந்துள்ளன
அது பற்றி விமர்சனம் செய்ய நாங்கள் விரும்பவில்லை. ஆனால் இருந்தாலும் கூட நேற்றைய தினம் ரெலோவின் பேச்சாளர் சம்பந்தர் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இல்லை அல்லது செயலற்று போய்விட்டது அவருடைய தலைவர் பதவி வறிதாக்கப்பட்டுள்ளது என ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சி கூட்டமைப்பிலிருந்து வெளியேறவில்லை. ஆனால், இரண்டு கட்சிகளும் தாங்கள் காலம் காலமாக பல காலமாகவே உரசப்பட்டுக் கொண்டிருந்த ஒரு விடயம். அந்த விடயத்தை அவர்கள் நிறைவேற்றி இருக்கின்றார்கள் அது அவர்களுடைய உரிமை.
கூட்டமைப்பின் உடைய தலைவர் என்பது இதுவரையில் அதாவது நாடாளுமன்ற தேர்தல்கள் முடிந்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட மூன்று கட்சிகளும் அதனுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாகச் சேர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின் சம்பந்தன் அவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்து இருக்கின்றார்கள்.
அது முன்பும் அவ்வாறே நடந்தது ஆகவே அவருடைய தெரிவு என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய தலைவர் தெரிவு என்பது, இதுவரையிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றாலே அது நாடாளுமன்ற குழுவாகவே இருந்திருக்கின்றது.
நாடாளுமன்ற குழு தெரிவு செய்த சம்பந்தர் இன்னும் அந்த பதவியில் தான் இருக்கின்றார். ஆகவே, அவரை நீக்குவதோ அல்லது அந்த பதவி வறிதாக்குவதோ வெறுமனே ஒரு ஊடக அறிக்கை மூலம் சொல்ல முடியாது. முறைப்படியாக நாடாளுமன்ற குழு கூடி அல்லது விரும்பினால் அவரை நீக்கலாம். அல்லது அவர் விரும்பினால் விலகலாமே தவிர பதவி வறிதாக்கள் செயலற்று போதல் என நீண்ட வரலாற்றைக் கொண்டு ஒரு தலைவரை இவ்வாறு அவமதிக்கின்ற ஒரு கூற்று என்னை பொறுத்தவரையில் தமிழரசு கட்சி சார்ந்தது மட்டுமல்லாது பொதுவாகவே ஒரு மனிதனுடைய மதிப்பு சார்ந்த விடயத்திலே அதை ஆட்சேபிக்கின்றேன்.
அது தவறு சம்பந்தன் இன்னும் நாடாளுமன்ற குழுவின் தலைவராகவும் கூட்டமைப்பின் தலைவராகவும் செயற்படுகின்றார் என்பதே உண்மை” என்றார்.
