கோண்டாவில் சந்திப்பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட Pizza hut உணவகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நல்லூர் பிரதேசசபை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் நல்லூர் பிரதேசசபை செயலாளர் யுகரஜா ஜெலீபன் அவர்களால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
“பலாலி வீதி, கோண்டாவில் சந்தி என்னும் முகவரியில் அமைக்கப்பட்டிருக்கும் தனியாருக்கு சொந்தமான கடைத்தொகுதியில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள Pizza hut என்னும் பெயருடைய அசைவ உணவகம் அமைந்துள்ள கட்டிடத்திற்கு இன்று வரையில் கட்டிட அமைவுச்சான்றிதழ் பெற்றுக் கொள்ளப்படவில்லை.
அத்துடன் குறித்த உணவகத்திற்கு இதுவரையில் வியாபார அனுமதிப்பத்திரத்தினைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பமும் சமர்ப்பிக்கவில்லை.
மேலும், குறித்த உணவகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமைக்கு ஆட்சேபனை தெரிவித்து, குறித்த உணவகத்திற்கு நேர் எதிரே அமைந்துள்ள விநாயகர் ஆலய பரிபாலன சபை மற்றும் இந்து சமய பொது அமைப்புக்கள் ஆகியவற்றிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
எமக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில், இம்மாதம் 2023.01.17 ஆம் திகதி இடம்பெற்ற சபை அமர்வின் போது குறித்த விடயம் சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு சபையில் ஆராயப்பட்டதன் அடிப்படையில் குறித்த உணவகத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் எமது சபையின் சட்ட ஆலோசகரின் ஆலோசனையினைப் பெற்றுக்கொள்வதெனவும் அதுவரையில் குறித்த PIZZA-Hut உணவகத்தினது வியாபார நடவடிக்கையினை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பதற்கான அறிவித்தலினை வழங்குவதெனவும் சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே, உரிய அறிவித்தல் வழங்கப்படும் வரையில் குறித்த PIZZA-Hut வியாபார நடவடிக்கைகளினை தற்காலிகமாக இடைநிறுத்தி பிரதேசசபைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். இவ் அறிவித்தலின் பிரகாரம் தாங்கள் செயற்படத் தவறின் தங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதனையும் மனவருத்தத்துடன் அறியத்தருகின்றேன்” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
