12 வருடங்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் இன்று (26) குற்றமற்றவர் என கருதி மன்னார் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 13 ஆம் திகதி யாழ்பாணத்தில் மானிப்பாய் பகுதியில் தில்லைராஜாவுக்கு சொந்தமான மரக்காலை ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்ட தில்லைராஜ் கடந்த 12 வருடங்களாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று குறித்த வழக்கு மன்னார் மேல் நீதி மன்றத்துக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி தில்லைராஜ் குற்றமற்றவர் என்ற அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
விடுதலையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தில்லைராஜ் தெரிவித்ததாவது,
“12 வருடங்களின் பின் தான் குற்றமற்றவன் என நிருபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளேன். எனக்காகவும் என் விடுதலைக்காகவும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் தொடர்சியாக முன்னிலையான சிரேஸ்ர சட்டத்தரணி ரட்ணவேல் அவர்களுக்கும் அவரது உதவியாளர் தாயளனுக்கும் அதே போன்று யாழ் மாவட்டத்தில் 2016 ஆண்டு இடம் பெற்ற வழக்கில் என் சார்பாக ஆஜரான சட்டத்தரணி ரெமிடியேஸிற்கு நன்றிகள்.
நான் எந்த குற்றச்சாட்டுகளும் இன்றி 12 வருடம் சிறையில் இருந்து விடுதலையாகி இருக்கின்றேன் என்னை போன்று இன்னும் 25 வருடங்களுக்கு மேலாக அரசியல் கைதிகளாக சிறைகளில் எங்களுடன் ஒன்றாக இருந்த பலர் இன்னும் சிறைகளில் உள்ளார்கள். அவர்களையும் விரைவில் விடுதலை செய்து தர வேண்டும்” என்றார்.
