யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக மேலும் 5 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாகப் பதவி வகித்தவர்களின் பதவிக் காலம் கடந்த 15 ஆம் திகதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 16 ஆம் திகதி முதல் அடுத்துவரும் மூன்றாண்டு காலத்துக்கு 9 வெளிவாரி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
அதன் பின்னர் மேலும் 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார்.
தெல்லிப்பழை துர்காதேவி தேவஸ்தானம், சிவபூமி அறக்கட்டளை ஆகியவற்றின் தலைவர் கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன், ஓய்வுபெற்ற பணிப்பாளர் நாயகம் வி.கனகசபாபதி, லங்கா சஸ்ரெயினபிள் வென்ஜஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் குலேந்திரன் சிவராம், வடக்கு உணவு நிறுவனத்தின் ஸ்தாபகரும், பணிப்பாளருமான கபிலன் கருணானந்தன் மற்றும் யாழ். ஆயர் இல்லத்தைச் சேர்நத வண. கலாநிதி பி.ஜே. ஜெபரட்ணம் ஆகியோரே உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
