இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களுக்கு கரிநாள் என்றும், சுதந்திர தினத்தன்று கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சாவகச்சேரியில் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஜனநாயகம் என்ற போர்வையில் பேரினவாத ஆட்சி காரணமாகவே சுதந்திரம் கிடைத்தும் 75 ஆண்டுகளாக தமிழர்களுக்கு சுந்தந்திரம் கிடைக்கவில்லை.
சிங்கள மக்களுக்கு அரசியல் சுதந்திரம் இருந்தாலும் இன்றைய சூழ்நிலையை பார்க்கின்ற பொழுது சிங்கள மக்களுக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பது தெட்டத் தெளிவாகின்றது.
சுதந்திரதினம் என்ற போர்வையில் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை நாடும் கடனாளியாக இருக்கின்ற நிலையில் 75வது சுதந்திர தினத்தை ஜனாதிபதி கொண்டாட விரும்புவதை அடியோடு நிராகரிக்கினறோம்.
நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திர தின கொண்டாட்டத்தை புறக்கணிக்க வேண்டும். வருகின்ற மாசி மாதம் 04 ஆம் திகதி மட்டக்களப்பில் கறுப்புக் கொடி போராட்டத்தை நடத்த உள்ளோம்” என்றார்.
