வடக்கு -கிழக்கிலுள்ள கட்சிக்கான ஒரே நிற துண்டினை தொடர்ந்தும் கழுத்தினில் அணிந்து கொள்ளக்கூடிய கட்சி தமிழரசுக்கட்சி மாத்திரமே என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அத்துடன் ஏனைய கட்சிகள் தமது கட்சிகள், துண்டினை தூக்கு போடுவதற்கு மாத்திரமே பயன்படுத்தும் நிலையில் உள்ளது.
தமிழ்மக்களின் அரசுக்கான கட்சியும் தமிழரசுக் கட்சியே. தொடர்ச்சியாக தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் கட்சியும் தமிழரசுகட்சியே.
கடந்த தேர்தலில் கப்பல் ஒன்றை வாடகைக்கு ஒருவர் எடுத்து வந்து மக்களை ஏமாற்றினார். அவர் இன்று மட்டக்களப்பிற்கு அதனை வாடகைக்காக பெற்று வந்துள்ளார்.
அம்பாறையில் நடந்தது ஒருபோதும் மட்டக்களப்பில் நடைபெறாது.
இதேநேரம் இம்முறை கப்பலுக்கு பதிலாக படகை ஒருவர் எடுத்து வந்துள்ளார். எவர் வந்தாலும் தமிழ் மக்களின் நிரந்தர கட்சியின் சின்னம் வீடுதான்” என்றார்.
