மீள் குடியேற்ற நிதியாக 38000 ரூபா அனைவருக்கும் வழங்கப்படும். அதற்கான நிதித்தொகை கிடைக்கப்பெற்றுள்ளது என யாழ் மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரம் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கச்சதீவுத் திருவிழாவானது மார்ச் மாதம் 3 ம் திகதி மற்றும் 4 ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலிலிருந்தும் 8000 பேர் வரை கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு வழமை போல கச்சதீவுக்கு, புங்குடுதீவு குறிகட்டுவான் பகுதியிலிருந்தும் நெடுந்தீவிலிருந்தும் பிரயாணங்களை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு குறிகட்டுவானுக்குச் செல்வதற்கான பேருந்து யாழ்ப்பாணத்திலிருந்து 3ஆம் திகதி காலை 5 மணிதொடக்கம் முற்பகல் 10 மணி வரை அரச மற்றும் தனியார் பேருந்துகளின் சேவைகள் யாழ் பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கும்.
குறிகட்டுவானிலிருந்து படகுச் சேவையானது காலை 6 மணியிலிருந்து முற்பகல் 11 மணிவரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.
குறிகட்டுவானிலிருந்து செல்லும் பயணிகளுக்கான இரு வழிக்கட்டணம் 2000 ரூபாவாகவும் நெடுந்தீவிலிருந்து செல்வோருக்கான இருவழிப் பயணக் கட்டணம் 1500 ரூபா எனவும் படகு உரிமையாளர் சங்கங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு இடங்களையும் தவிர
வெளி மாவட்டத்திலிருந்து கலந்துகொள்ளும் பக்தர்கள் வழமை போல தனிப்பட்ட படகுகளில் செல்ல முடியும்.
அவர்கள் தமது கடற்பயண பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முன்னேற்பாட்டை கருத்திலெடுத்து அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்பு கொண்டு பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள முடியும் அத்துடன் மார்ச் 3 ம் திகதி பிற்பகல் 6 மணிக்கு முன்னதாக
கச்ச தீவை வந்தடையக் கூடியவாறான பயண ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
வழமையாக கச்சதீவுக்கு செல்வோருக்கான உணவுகள் ஏற்பாடு செய்வது வழக்கம் ஆனால் இம்முறை 3ஆம் திகதி இரவு வருபவர்கள் தமக்கான உணவை ஏற்பாடு செய்ய வேண்டும் என கத்தோலிக்க திருச்சபையூடாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
4ஆம் திகதி காலை உணவானது வழமை போல் கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாத்திரையுடன் சம்பந்தப்பட்ட பயணமாக அமைவதால் மது மற்றும் ஏனைய போதைப் பொருட்களைக் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்பவர்கள் கடற்படை மற்றும் பொலிஸாரால் கண்காணிக்கப்பட்டுத் திருப்பியனுப்பப்படுவர்.
இராணுவம் , கடற்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த 108 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. நீண்ட கால முயற்சியின் பயனாக குறிப்பிட்டளவு காணிகளை விடுவிக்க முடிந்தது. முகாம்களிலுள்ளவர்களை குடியமர்த்தும் நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ள போதும் சொந்தக் காணியிலுள்ளவர்கள் தமது காணிகளை பொறுப்பேற்று பயன்படுத்தினால் தான் தொடர்ந்தும் காணிகள் விடுவிக்க வசதியாக இருக்கும்.
காணி உரிமையாளர்கள் தற்போது உள்ள கட்டடங்களில் குடியேறாத தருணம் அதில் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் பெறுமதியான பொருட்கள் களவாடப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மீள் குடியேற்ற நிதயாக 38000 ரூபா அனைவருக்கும் வழங்கப்படும். அதற்கான நிதித்தொகை கிடைக்கப்பெற்றுள்ளது. அண்மையில் ஜனாதிபதியும் அதற்கான நிதித்தொகையை நேரடியாக வழங்கி வைத்தார்.
இதற்கு மேலாக சர்வதேச நிறுவனங்களையும் நாடியுள்ளோம். நாளைய தினமும் யுனெப்ஸ் நிறுவன பிராந்திய முகாமையாளரும் யாழ்ப்பாணத்திற்கு நேரடி விஜயத்தை மேற்கொள்ளவுள்தாகச் செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதைப்போல் ஏனைய நிதி நிறுவனங்களுடனும் தொடர்பு கொண்டு நிதியுதவிகளைப் பெற்று மக்களுக்கு வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்- என்றார்.
