இந்தியா – ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. மொத்தம் 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.
ஆரம்பம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வாக்கு வித்தியாசம் அதிகமாகிக்கொண்டே சென்றது.
இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவும், மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனும் பின்தங்கினர்.
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
இறுதிச் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 7,984 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,115 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட 77 வேட்பாளர்களில் 75 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். காங்கிரஸ், அதிமுக, வேட்பாளர்களைத் தவிர யாரும் டெபாசிட் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
