இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனிப்புலம் பகுதியில் கடந்த 26ஆம் திகதி காரில் சென்ற நபரை வழிமறித்து , அவர் மீது வாள் வெட்டு தாக்குலை மேற்கொண்ட பின்னர் , காரினையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவில் இருந்து 2 இலட்ச ரூபா காசினை பெற்றுக்கொண்டே தாக்குதலை மேற்க்கொண்டதாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சங்கானை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். ” தானும் பனிப்புலம் பகுதியை சேர்ந்த மற்றுமொரு இளைஞனுமாக இணைந்தே தாக்குதல் மேற்கொண்டோம். குறித்த நபர் மீது தாக்குதலை மேற்கொள்ளுமாறு கனடாவில் இருந்து 2 இலட்ச ரூபாய் பணம் எமக்கு வழங்கப்பட்டது. அந்த பணத்தினை பெற்றுக்கொண்டே தாக்குதலை மேற்கொண்டோம்” என கைதுசெய்யப்பட்டவர் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அதேவேளை குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்ட நபருடன் இணைந்து தாக்குதலை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் , அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
