உயரத்துடிப்பவர்களை உயர்த்தும் நோக்கில் தமிழ் ஒளியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உதவிச் செயற்றிட்டத்தின் இரண்டாவது செயற்பாட்டுடன் இணைந்து கொண்டோம்.
இரண்டாவது உதவித்திட்டத்தில் கற்றலில் ஆர்வம் கொண்டு வறுமையையும் பொருட்படுத்தாது பாடசாலைக்கு நடந்து செல்லும் மாணவர்களின் நீண்ட நாள் ஈடேறாத விருப்பத்தை நிறைவேற்றி வைத்தோம்.
கணவனை இழந்து தன்னுடைய நான்கு பிள்ளைகளை தன் முதுகிலே சுமந்து அவர்களின் எதிர்கால வாழ்விற்காய் தன் வாழ்வை அர்பணித்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண் தலைமைத்துவ குடும்பத்தால் வைக்கப்பட்ட கோரிக்கையை நாம் இன்று (08) நிறைவேற்றி வைத்துள்ளோம்.
மறவன்புலோ J/ 297 (கைதடி நாவற்குழி) கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் நான்கு பிள்ளைகளைக் கொண்ட பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு துவிச்சக்கர வண்டியை ஒன்றினை வழங்கி வைத்தோம்.
மிகவும் வறுமைக்குட்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த குறித்த பிள்ளைகளின் முகத்தில் பல ஏக்கங்களை அவதானித்தோம். நாம் செய்த உதவி அவர்களுக்கு தேவையானவற்றில் ஒரு துளியே ஆகும்.
நான்கு பிள்ளைளில் இரண்டு பெண்பிள்ளைகள். அவர்கள் இருவரும் தரம் – 11 இல் கல்வி பயின்று வருகின்றார்கள். மூன்றாவது மகன் தரம் – 06 இலும், நான்காவது மகன் தரம் – 03 இலும் கல்வி பயின்று வருகின்றார்கள்.
பல விருப்பங்களுக்கு அப்பால் ஏக்கங்களுடன் வாழும் இக்குடும்ப பிள்ளைகளின் கல்வியை சிறப்பாக்கும் நோக்கில் துவிச்சக்கர வண்டியை வழங்கும் கோரிக்கையை புலம்பெயர்ந்து வாழும் சமூக ஆர்வலர் ஒருவரிடம் முன்வைத்தோம்.
அதற்கமைவாக, இச்செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு கனடா teknion form நிறுவனத்தில் வேலை செய்யும் தமிழ் ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களது சம்பளத்தில் சிறிதளவு சேமித்து தாயகத்தில் உள்ள எம்மக்களுக்கு உதவுவது வழமை. அதன் அடிப்படையில் இவ் மாதம் கந்தசாமி முரளி அவர்கள் தமிழ் ஒளியுடன் இணைந்து இச்சேவையை முன்னெடுத்துள்ளார்.
உதவிக்கரம் நீட்டிய நல்லுள்ளத்திற்கு உதவி பெற்ற குடும்பத்தின் சார்பிலும், தமிழ் ஒளியின் சார்பிலும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இன்னும் எத்தனையோ குடும்பங்கள் வாழ்வது எதற்கென்று தெரியாத நிலையில் மிகவும் துன்பம் நிறைந்த வாழ்க்கைய அனுபவித்து வருகின்றார்கள்.
தாயகத்தில் அல்லப்படும் குடும்பங்களுக்கு நல்லெண்ணத்துடன் உதவிகரங்கள் நீட்டிவரும் உள்ளூர், வெளிநாடு சமூக ஆர்வலர்களே துன்பங்களுடன் வாழும் எங்கள் உறவுகளை அடையாளம் காட்டிட நாங்கள் தயாராகவே உள்ளோம்.
உதவிக்கரம் கொடுக்கும் நல்லுள்ளங்கள் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள். உயரத்துடிக்கும் எம் உறவுகளுக்கு எம்மால் முடிந்த சிறு ஆரம்ப அத்திவாரத்தை அமைத்துக் கொடுத்துடுவோம்.
