வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் மேற்க்கொண்டமை மற்றும் அச்சுறுத்திய குற்றச்சாட்டில் போதகர் மற்றும் இருவர் அச்சுவேலி பொலிஸரால் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பெரிய வெள்ளி தினமான நேற்றுமுன் தினம் இச் சம்பவம் அச்சுவேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அச்சுவேலிப் பகுதியிலுள்ள கிறிஸ்தவ மதச்சபை ஒன்றில் நேற்றுமுன்தினம் மாலை பெரிய வெள்ளி ஆராதனை நடந்துள்ளது.
அந்தப் பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பப்பட்டமை தொடர்பாக முன்னரும் பல தடவைகள் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்றுமுன்தினமும் அதிக ஒலி எழுப்பப்பட்டுள்ளது.
இதன்போது தமது சபைக்குச் சொந்தமான தேவாலயத்தின் மீது கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்து, கையில் கொட்டன்களோடு குறித்த சபையின் போதகர், அவரது மகன் உள்ளிட்ட மூவர் அப்பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவரை கழுத்தை நெரித்ததோடு அவரது தாயாரையும் தாக்கினர் என்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், போதகர் உட்பட மூவர் நேற்று (08) அச்சுவேலி பொலிஸரால் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் போதகரும் ஏனைய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
