தமிழர் பகுதியில் திட்டமிட்டு மேற்க்கொள்ளப்பட்டு வரும் சிங்கள மயமாக்கல்களுக்கு அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தேசமாக எதிர்ப்பு தெரிவிக்காத வரைக்கும் எங்களுடைய நிலங்கள் பறிபோய்க்கொண்டே இருக்கும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மக்களின் அழைப்பின் பிரகாரம் தையிட்டியில் சட்டவிரோதமாக தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையினை பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த விகாரை அமைக்கப்பட்ட இடம் தனியாருக்கு சொந்தமானது. சட்டவிரோதமாக குறித்த விகாரை அமைக்கும் வேலைப்பணிகள் இரண்டு வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது.
அந்தவேளையில், மாவட்ட அபிவிருத்தி சபை கூட்டங்களிலும் பிரதேச அபிவிருத்தி சபைக்கூட்டங்களிலும் இந்த சட்டவிரோதமாக விகாரை அமைக்கும் பணிகளை நிறுத்தப்படவேண்டும் என கோரியிருந்த நிலையில் இந்த விடயம் தொடர்பாக இன்னுமொரு விசேட கூட்டம் கூடப்படும் என வாக்குறுதி அளித்திருந்தும் எந்தவிதமான கூட்டங்களோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இன்று இந்த விகாரை இராணுவத்தினரின் முழுப்பங்களிப்போடு கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றது.
தையிட்டியில் மட்டுமல்ல இன்று தமிழர்தாயக நிலப்பகுதி முழுவதிலும் சிங்களமயமாக்கல் வேலைத்திட்டத்திட்டமானது வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாங்கள் இந்த விடயத்தினை ஐ.நாவிலும் பதிவு செய்திருக்கிறோம். ஆகவே எங்களைப்பொறுத்தவரையில் மக்கள் மட்டத்தில் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இன்று இப்பபகுதியிலுள்ள மக்களின் தொண்டைகளில் கைவைத்த நிலையில் தான் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறான நிலைகள் மத்தியில் அவர்கள் எங்களை அழைத்து இந்த விகாரை சம்மந்தமாக பிரச்சனைகளை வெளிப்படுத்தி இருந்தார்கள்.
எங்களைப்பொறுத்த வரையில் இந்த மாதிரியான சட்டவிரோத இனவாத போக்கிற்கு ஒரு தேசமாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்காத வரைக்கும் எங்களுடைய நிலங்கள் பறிபோய்க்கொண்டே இருக்கும்.
நாங்கள் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக எங்களுடைய முழு எதிர்ப்பையும் வெளிப்படுத்துவோம். எங்களுடைய எதிர்ப்புக்களைத்தாண்டியே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்ற நிலையை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும்” என்றார்.
