“உங்களுடைய ஆக்கிரமிப்புக்கள் எங்களுடைய விடுதலைக்கான வேட்கையை ஒருபோதும் தணிக்காது. அது இன்னமும் எங்களை வீறு கொள்ளவே வைக்கும் என்ற செய்தியைச் சொல்லி, இறுதிவரை இந்த பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக போராடுவோம்” என சிரேஷ்ட சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்தார்.
திருகோணமலையில் இன்று (13) இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
” சிங்கள பௌத்த பேரினவாத அரசு அண்மைக்காலமாக தமிழ் மக்களை மோசமாக சீண்டிக் கொண்டிருக்கின்றது. குருந்தூர் மலை, வெடுக்குநாறி, தையிட்டி என்று சீண்டிய சிங்கள பெளத்த பேரினவாத அரசு இன்று தமிழர் தலைநகரமான திருகோணமலையிலும் இனவாதத்தை காட்டவந்துள்ளது.
திருகோணமலையில் வில்லூண்டி முருகனுக்கு சொந்தமான காணியை ஆக்கிரமித்து, தாய்லாந்தில் இருந்து பிக்குகளை கொண்டு வந்து நான்கு அடி உயரமுள்ள புத்தர் சிலையை வைக்கப் போகின்றார்களாம்.
இது தமிழர்களை சீண்டுகின்ற செயற்பாட்டின் அதி உச்சம். இதை நாங்கள் அனுமதிக்கப் போவது கிடையாது. தமிழர்களுடைய தாயகத்தை திட்டமிட்டு கபளீகரம் செய்கின்ற செயற்பாட்டில் ரணில், ராஜபக்ச அரசாங்கத்தின் வீச்சு தீவிரம் பெற்றுள்ளது.
இதற்கு எதிராக தமிழ் மக்களாகிய நாங்கள் ஜனநாயக வழியில் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் இன்று தமிழர்களுடைய தலைநகரமான திருகோணமலையில் அந்த புத்தர் சிலை அமைப்புக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எமது போராட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
சரத் வீரசேகர, விமல் வீரவன்ச போன்ற சிங்கள பௌத்த பேரினவாத ஒட்டுமொத்த வடிவத்திற்கும், அவர்களுக்குப் பின்னால் இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கும் நாங்கள் ஒரு செய்தியை சொல்ல விரும்புகின்றோம்.
நீங்கள் எங்கள் மீது ஆக்கிரமிப்புகளைத் திணித்துக் கொண்டிருந்தால், ஒரு தாக்கத்திற்கு சமனும் எதிருமான மறு தாக்கம் இருக்கும். அதற்கு இணையாக தமிழ் மக்களும் எழுச்சி கொண்டு கொண்டே இருப்பார்கள்.
உங்களுடைய ஆக்கிரமிப்புக்கள் எங்களுடைய விடுதலைக்கான வேட்கையை ஒருபோதும் தணிக்காது. அது இன்னமும் எங்களை வீறு கொள்ளவே வைக்கும் என்ற செய்தியைச் சொல்லி, இறுதிவரை இந்த பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக போராடுவோம்” – என்றார்.
