இந்தியா – ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹனாகா பகுதியில் நடைபெற்ற மிகப்பெரிய விபத்தில் 3 ரயில்கள் சிக்கி 280 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த ரயில் விபத்துக்கு முக்கிய காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது கோரமண்டல் ரயில் மோதி பெட்டிகள் தடம் புரண்டதுதான் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளாவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் மூன்று முறை விபத்துக்குள்ளாகியுள்ளது. தற்போது நடைபெற்றது 4 ஆவது முறையாகும்.
2002 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி நெல்லூர் மாவட்டம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 8 பெட்டிகள் தடம் புரண்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. சுமார் 100 பேர் காயம் அடைந்தனர். நெல்லூர் அருகே மோசமான மெயின் லைன் காரணமாக விபத்து நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் திகதி ஒடிசா மாநிலம் ஜாஜ்புர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் தண்டவாளம் மாறும்போது விபத்துக்குள்ளானது. இதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 16 பயணிகள் உயிரிழந்தனர். சுமார் 200 பேர் காயம் அடைந்தனர்.
அதிவேகமாக சென்ற நிலையில் தண்டவாளம் மாறியதால் ரயில் இன்ஜின் தலைகீழாக கவிழ்ந்தது. 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் திகதி நெல்லூர் மாவட்டம் அருகே விபத்துக்குள்ளானது.
இதில் 32 பயணிகள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
தற்போது 2023 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 2 ஆம் திகதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 280 ஐ கடந்துள்ளது.
இதில் உள்ள விசித்திரமான விசயம் என்னவெனில் இந்த விபத்துக்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமையிலேயே நடந்துள்ளது. ஒருவேளை கோரமண்டல் ரயிலுக்கும் வெள்ளிக்கிழமையும் ஆகாமல் இருக்குமோ?. எதுவாக இருந்தாலும் தொழில்நுட்பமும், மனிதத் தவறும் நடைபெறாமல் இருந்தால விபத்துக்களை தடுக்கலாம்.
