முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் உள்ள 29 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் போர் தொடங்க முன்பு 1985 ஆண்டு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 36 வீதமான காடுகள் காணப்பட்டன. போர் முடிவடைந்த 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட நிலம் போர் காரணமாக அந்த மக்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த காரணத்தினால் அந்த காணிகள் காடுகளாக உருமாற்றம் பெற்றிருந்தது.
காடுகளை கொண்ட காணிகள் 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் கூகிள் வலையமைப்பினையும் ஜி.பி.எஸ் புள்ளியினையும் பயன்படுத்தி காடுகளாக காணப்பட்ட அத்தனை நிலங்களையும் ஒதுக்கு காடுகளாக பிரகடனம் செய்தார்கள்.
இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தின் மொத்த காடுகளின் வீதம் 68 வீதமாக அதிகரித்துள்ளது.இதனால் பொதுமக்கள் பெரும் இடர்களை எதிர்கொண்டுள்ளனர்.
மக்கள் தங்கள் சொந்த நிலங்கள் விவசாய நிலங்களை மீட்டு தருமாறு கோரியதன் காரணத்தினால் பல தரப்பினரும் எடுத்த முயற்சியின் காரணமாக தற்போது 29 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் விடுவிக்க வன பாதுகாப்பு திணைக்களத்தினர் முன்வந்துள்ளனர்.
