இளம் யுவதி ஒருவர் தாய்க்கு முன்னால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் மொனராகலை மாவட்டம், செவனகலை பிரதேசத்தில் நேற்று (09) பகல் இடம்பெற்றுள்ளது. 22 வயதுடைய எஸ்.லக்சிகா என்ற யுவதியே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் குறித்த யுவதியின் 22 வயதுடைய முன்னாள் காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட யுவதியும், கைதான இளைஞரும் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போது காதலிக்க ஆரம்பித்தார்கள்.
கடந்த வருடம் இளைஞருடனான காதலை யுவதி நிறுத்திக்கொண்டார். அதற்குப் பழிவாங்கும் வகையிலேயே யுவதியை இளைஞர் கழுத்தறுத்துப் படுகொலை செய்தார் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று மதியம் யுவதியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த இளைஞர், யுவதியின் தாயாரின் கண் முன்னால் இந்தக் கொலை வெறியாட்டத்தைப் புரிந்துள்ளார் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
